ராஜபக்ச குடும்பத்தில் ஒருவர் கூட இனி நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது - ரணில் தகவல்! - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, May 14, 2022

ராஜபக்ச குடும்பத்தில் ஒருவர் கூட இனி நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது - ரணில் தகவல்!

ராஜபக்ச குடும்பத்தினரில் ஒருவருக்கேனும் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகக் கூட வர முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் ராஜபக்சர்களை பாதுகாக்கும் நோக்கத்திலோ அல்லது அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் விதத்திலோ செயற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி : மிகவும் தீர்க்கமான சந்தர்ப்பத்தில் பிரதமராக பதவி ஏற்றுள்ளீர்கள். பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கு எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளீர்கள் ?

பதில் : ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கூட இவ்வாறானதொரு பொருளாதார வீழ்ச்சி காணப்படவில்லை. தற்போது நாட்டில் அந்நியசெலாவணி வருமானும் இல்லை. உள்நாட்டு வருமானமும் இல்லை. எனவே ரூபா வருமானத்தை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

வரி அறவீட்டின் மூலம் எவ்வாறு வருமானத்தைப் பெறுவது என்பதை முன்னாள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாடு தற்போதுள்ள நிலையில் உள்நாட்டில் டொலர் வருமானத்தை அதிகரிக்க முடியாது. தற்போது சுமார் 3 பில்லியன் நிதியுதவி தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதே சவாலாகும். வரிசை யுகத்தினை இல்லாமலாக்கி மக்களுக்கு மூன்று வேளையும் உண்ணக்கூடிய சூழலை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்.

கேள்வி : வரிசை யுகத்தை இல்லாமலாக்கி எவ்வாறு மக்களுக்கு மூன்று வேளையும் உண்ணக் கூடிய சூழலை ஏற்படுத்துவீர்கள்?

பதில் : 1977 இல் திறந்த பொருளாதார கொள்கை மூலம் வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம். 2001 இல் மினசாரம் அற்ற இருண்ட யுகம் காணப்பட்டது. அதனையும் நிவர்த்தி செய்தோம். 2015 இல் பொருளாதாரம் வீழ்ச்சியடையாமல் பாதுகாத்தோம்.

2019 இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னரும் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பினோம். அதே போன்று தற்போதுள்ள சவாலையும் ஏற்று பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவேன்.

கேள்வி : நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் நீங்கள் மாத்திரமே இருக்கின்றீர்கள். அவ்வாறிருக்கையில் உங்களது வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கான பலம் நாடாளுமன்றத்தில் உங்களுக்கு இருக்கிறதா?

பதில் : 1939 இல் வின்ஸ்டன் சேர்ச்சிலுடன் 4 உறுப்பினர்கள் மாத்திரமே இருந்தனர். எனினும் அவர் பிரதமராகி யுத்தத்திலும் வெற்றி பெற்றார்.

கேள்வி : நாடாளுமன்றத்தின் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்ள எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளீர்கள்?

பதில் : சம்பிரதாய பூர்வமாக செயற்படுவது தவறாகும். நாடாளுமன்றத்திற்கு மீண்டும் அதிகரத்தைப் பெற்றுக் கொள்ளவும் , அமைச்சரவைக்கு அப்பால் குழு முறைமையொன்றை உருவாக்குவதற்கும் , காலி முகத்திடலில் உள்ள இளைஞர்கள் போன்றவர்களை உள்ளடக்கிய குழுக்களை அமைப்பதற்கும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

கேள்வி : 'கோட்டா கோ கம' உள்ளிட்ட எதிர்ப்புக்களுக்கு மத்தியில் ஜனாதிபதியுடன் இணைந்து எவ்வாறு செயற்படப் போகிறீர்கள்?

பதில் : 'கோட்டா கோ கம' காணப்பட வேண்டும் என்று நாம் இணக்கப்பாட்டை எட்டியுள்ளோம். 2001 இல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் சேவையாற்ற வேண்டியேற்பட்டது. நான் எனது வேலைகளைச் செய்வேன்.

பொருளாதாரத்தை கட்டிழுப்பித்தருகின்றேன். உரிமைகளை பாதுகாத்துத் தருகின்றேன். மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுப்பேன்.

கேள்வி : வருமானத்தை பெற்றுக் கொள்வதற்காக எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்?

பதில் : சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். நாம் முறையாக செயற்படுகின்றோம் என்பதை அறிந்து கொண்டால் ஏனைய நாடுகளும் எமக்கு உதவும். 2020, 2021 இல் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்திருயிருக்க வேண்டும்.

ஆனால் இவர்கள் அதனை செய்யவில்லை. தற்போது குறுகிய காலத்தில் 3 டிரில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது. 100 பில்லியன் ரூபா மாத்திரமே எஞ்சியுள்ளது. எனவே அரச உத்தியோகத்தர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு மேலும் பணத்தை அச்சிட வேண்டியுள்ளது.

அவ்வாறில்லை என்றால் அரச உத்தியோகத்தர்களுக்கு ஊதியம் வழங்க முடியாது.

கேள்வி : நீங்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ராஜபக்சர்களை பாதுக்காப்பதற்காகவே முன்வந்துள்ளதாகவும் , அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கு அவர்களுக்கு வழியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கே தற்போது பதவியேற்றுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறதே?

பதில் : ராஜபக்ஷ குடும்பத்தில் எவருக்காகவது அடுத்த தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராகவேனும் வர முடியும் என்று நீங்கள் கருதுகின்றீர்களா?

கேள்வி : எவ்வாறிருப்பினும் 2015 இல் ராஜபக்சரகள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார்கள் அல்லவா?

பதில் : அதற்கு நான் காரணமல்ல. நான் அவர்களுக்கெதிராக பல வழக்குகளைத் தொடர்ந்திருக்கின்றேன். மீண்டும் அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றக் காரணம் ஊடகங்களேயாகும். எந்தவொரு ஊடகமும் கோட்டாபய ராஜபக்சவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறவில்லை. சமூக வலைத்தளங்களும் அவ்வாறே செயற்பட்டன.

கேள்வி : காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல்களை மேற்கொண்டவர்களுக்கு எதிராக நீங்கள் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை யாது?

பதில் : இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியிருக்கின்றேன். இது தொடர்பில் விசேட கண்காணிப்பொன்றை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணிகள் சங்கத்திடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

பீ அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் குறித்த தாக்குதல்கள் தொடர்பில் வெளியாகியுள்ள காணொளிகள் மற்றும் புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேள்வி : ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தற்போது மக்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளும் நிலைமை காணப்படுகிறது. இதற்கு உங்களது பதில் என்ன?

பதில் : ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு தொடர்பான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதனுடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் தடுப்புக்காவலில் உள்ளனர். எனினும் மக்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகத்தினை மேற்கொண்டிருப்பார்கள் என்று நான் எண்ணவில்லை.

காரணம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் 55 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட போதிலும் , பிரதேசசபை உறுப்பினர்கள் தாக்கப்பட்ட போதிலும் , நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ள போதிலும் பொலிஸார் மக்கள் மீது துப்பாக்கிப்பிரயோகத்தினை மேற்கொள்ளவில்லை.

எனவே பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகத்தினை மேற்கொண்டனர் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு சரி என்று நான் எண்ணவில்லை.

கேள்வி : தேசபந்து தென்னகோன் தாக்கப்படும் போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதே?

தில் : அவர் தாக்கப்படும் போது அவரை பாதுகாப்பதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அலரி மாளிகை சுற்றி வளைக்கப்பட்ட போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இவற்றை தவிர வேறு பகுதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக என எனக்கு தெரியாது.

கேள்வி : சர்வதேசத்திடமிருந்து குறிப்பாக சீனாவிடமிருந்து உதவிகள் கிடைக்கும் என நம்புகின்றீர்களா?

பதில் : தூதுவர்களை சந்தித்து கலந்துரையாடியிருக்கின்றேன். சீனாவும் எமக்கு உதவும். சீனாவுடன் இதற்கு முன்னரும் இணைந்து பணியாற்றியிருக்கின்றேன். எனவே அதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும் சிறந்த தொடர்பு இருக்கிறது.

கேள்வி : அந்நிய செலாவணியை எவ்வாறு ஈட்டுவீர்கள்?

பதில் : கடன் பெறுவதால் அதனை செய்ய முடியாது. பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் ஊடாகவே அந்நிய செலாவணியை சேமிக்க வேண்டும். பங்களாதேசைப் போன்று மேலதிக டொலரை வைத்திருக்கக் கூடியளவிற்கு செல்ல வேண்டும். அதற்கு தற்போதுள்ள முறைமையை மாற்றியமைக்க வேண்டும்.

இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்க வேண்டும் என்பதே தற்போது எனது இலக்காகவுள்ளது. சிறந்த முறையில் முன்னோக்கிச் செல்ல முடியும் என்ற பாரிய நம்பிக்கை எனக்கிருக்கிறது.  

நன்றி - பிபிசி, தமிழாக்கம்...


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here