சவுதி அரேபியாவில், வேலையிழந்து சிக்கி தவிக்கும் 10,000 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
சவுதியில் இந்தியர்கள் அனைவருக்கும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதால், யாரும் பசியோடு இருக்க மாட்டார்கள் என்றும் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிக்கை வெளியிட்டார்.
அதில், இந்தியர்களை தாயகம் அழைத்துவரும் பணியை பார்வையிட இணை அமைச்சர் வி.கே. சிங் சவுதி அரேபியா சென்று உள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய தூதரகம் முகாம்களை அமைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர்களை உடனடியாக தாயகம் அழைத்து வருவதை உறுதிசெய்ய சவுதியில் உள்ள வெளிநாட்டு மற்றும் தொழிலாளர் அலுவலகங்களுடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.