தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களைப் புரிந்த ராஜபக்சர்களையும், ஏனைய குற்றவாளிகளையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு அவசியமான தலைமைத்துவத்தை, கனடாவின் கொன்சவேட்டிவ் கட்சி மேற்கொள்ளும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
'ஹார்வெஸ்ட் ஒஃப் ஹோப்' நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொய்லிவ் இந்த கருத்தை பகிரங்கமாக முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
போர் குற்றங்கள்
“அடுத்த தேர்தலில் தான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையில் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் தரப்பினரை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டுச் செல்வேன்.
குறித்த நடவடிக்கைக்கு அவசியமான தலைமைத்துவத்தை வழங்கத் தயாராக உள்ளேன்.
முன்னதாக தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலையை நிகழ்த்திய இலங்கை அரசாங்கத்தை தனிமைப்படுத்தி தண்டிக்கும் நோக்கில் 2013 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டை தமது கட்சியை சேர்ந்த கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் புறக்கணித்திருந்தார்.
மேலும், கனடாவின் வளர்ச்சிக்கு தமிழ் மக்கள் ஆற்றிய பங்களிப்பு பெரிதும் பாராட்டத்தக்கது.
அத்தோடு தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களைப் புரிந்த ராஜபக்சர்களையும், ஏனைய குற்றவாளிகளையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு அவசியமான தலைமைத்துவத்தை கொன்சவேட்டிவ் கட்சியின் பிரதமரான நான் வழங்குவேன் எனவும் பியெர் பொய்லிவ் உறுதியளித்தார்.
No comments:
Post a Comment